சிவகங்கை மாவட்டத்தில் அக்.2ல் கிராம சபை கூட்டம் நடத்த ஆட்சியர் வேண்டுகோள்

சிவகங்கை மாவட்டத்தில் அக்.2ல் கிராம சபை கூட்டம் நடத்த ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2023-09-29 16:27 GMT

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்.

காந்தி ஜெயந்தி (02.10.2023) அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காந்தி ஜெயந்தி (02.10.2023) அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி 02.10.2023 காந்தி ஜெயந்தி அன்று காலை 11.00 மணியளவில் அரசாணை (நிலை) எண் 130 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நாள்:25.09.2006-ல் குறிப்பிட்டுள்ளவாறு குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

அன்றைய கிராம சபைக் கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 02.10.2023 காந்தி ஜெயந்தி அன்று காலை 11.00 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு அவ்வூராட்சியில், காந்தி ஜெயந்தியின் கருப்பொருளினை பற்றி விவாதிக்கவும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்,

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், 2023-24 ஆம் ஆண்டுக்கான சமூக தணிக்கை செயல் திட்டத்தினை பொதுமக்களுக்கு அறிவித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை , மக்கள் திட்டமிடல் இயக்கம் , காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் ஆகியவை கிராம சபை கூட்டத்திற்கான கூட்டப்பொருளில் விவாதிக்கப்படவுள்ளது.

எனவே, 02.09.2023 காந்தி ஜெயந்தி அன்று அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News