சிவகங்கை அருகே விவசாயி வெட்டிக் கொலை: மர்ம நபர்களுக்கு பாேலீசார் வலைவீச்சு

சிவகங்கை அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் விவசாயி வெட்டி படுகொலை. காவல்துறையினர் விசாரணை

Update: 2021-09-15 15:13 GMT

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் விவசாயி வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் பிரேதத்தை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சிவகங்கை அருகே வேம்பத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகுமலை. இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது குடும்பத்தினருக்கும் அருகில் உள்ள குடும்பத்தினருக்கும் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்கனவே தகராறு இருந்ததாகவும், இது குறித்த வழக்கு திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அழகுமலை தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது அங்கே வந்த அடையாளம் தெரியாத மூன்று‌ இளைஞர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அழகுமலையை கழுத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். ரத்த வெள்ளத்தில் மயங்கிச் சரிந்த அழகுமலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் திருப்பாச்சேத்தி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அழகுமலையின் உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்ட பகலில் வீட்டு வாசலில் விவசாயி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News