சுகாதார ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 2 பேர் மீது வழக்கு

பிரதமர் நரேந்திர மோடி படம் இல்லாமல் வைக்கப்பட்ட பேனரை அகற்றிய பாஜக நிர்வாகிகள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்

Update: 2021-12-06 03:30 GMT

சிவகங்கை மாவட்டம், சாலைகிராமம் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்

சாலைக்கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 2 பேர் மீது  போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் நேற்று மெகா கொரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்நிலையில், தடுப்பூசி முகாமில் வைக்கப்பட்டிருந்த  பேனரில் முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் படம் இருந்ததை பார்த்த பாஜகவினர்,  பிரதமர் நரேந்திர மோடியின் படம் எங்கே எனக் கேட்டு, மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன்,  முதல்வர் ஸ்டாலின் படம்  இருந்த பேனரை அரசு மருத்துவமனையில் இருந்து அகற்றியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, சாலைக்கிராமம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கௌதம், காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ், பாஜகவைச் சார்ந்த கோவிந்தன், பாலா என்ற செல்லக்குட்டி பாலா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட வேறு சிலரையும் போலீஸார் தேடி வருகின்றனர்,

Tags:    

Similar News