சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்

மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகை யான உதவி உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகிறது

Update: 2023-05-18 08:15 GMT

 மாவட்ட ஆட்சித் தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,29 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.91 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வகையான உதவி உபகரணங்களை வழங்கினார்.

சிவகங்கையில்  மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபெற்ற சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,29 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.91 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வகையான உதவி உபகரணங்களை வழங்கினார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபெற்ற சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, பல்வேறு வகையான உதவி உபகரணங்களை வழங்கி  பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர், மாற்றுத்திறனாளிகளின் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டு, அவர்களுக்கு பயனுள்ள வகையில், எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, அவர்களின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் கீழ், அவர்களை பயன்பெறச் செய்து, உரிய பலன்களும் அவர்களுக்கு வழங்கும் பணி முனைப்புடன் நடைபெற்று வருகிறது. இதுதவிர, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடனும், பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கிடவும், மாவட்ட நிர்வாகத்தினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு வகையான உதவி உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் பகுதிகளிலேயே சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ரீதியாக கணக்கிடும் பணி மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறியப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் தங்களின் கோரிக்கைகளை அளிப்பதற்கு ஏதுவாக, பிரதி வாரம் தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அவர்களுக்கென தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டமும், பிரதி மாதந்தோறும் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டமும், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டமும், இதுதவிர, மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் போன்றவைகள் நடத்தப்பட்டு, அவர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளையும், அவர்கள் உடல்நலத்தை பேணிக்காத்திடும் பொருட்டும் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், தேசிய அடையாள அட்டை வேண்டுதல்,பதிவு செய்தல், ஆதார் அட்டை பதிவு செய்தல், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு மேற்கொள்ளுதல், பிற துறைகளின் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள், உதவி உபகரணங்கள், வங்கிக்கடனுதவிகள், வேலைவாய்ப்பு பயிற்சிகள், பராமரிப்பு உதவித்தொகை மற்றும் மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 71 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இன்றையதினம் பெறப்பட்டுள்ள மனுக்களில், தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளவும், மீதமுள்ள மனுக்களை மறுபரிசீலனை செய்து உரிய பயன்களை மாற்றுத்திறனாளிகள் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், 08 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.92,000 மதிப்பீட்டில்; செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தக்க செயலியுடன் கூடிய திறன்பேசிகளும், 06 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.41,040 மதிப்பீட்டில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களும், 03 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.23,70 மதிப்பீட்டில் மடக்கு சக்கர நாற்காலிகளும், 03 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.21,270 மதிப்பீட்டில் மூன்று சக்கர சைக்கிள்களும், 02 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,200மதிப்பீட்டில் முழங்கை தாங்கிகளும், 04 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11,280மதிப்பீட்டில் காதொலிக்கருவிகளும், 02 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 மதிப்பீட்டில் கருப்பு கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல்களும் மற்றும் 01 மாற்றுத்திறனாளிக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவக் காப்பீட்டிற்கான அட்டையும் என மொத்தம் 29 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,91,490மதிப்பீட்டிலான பல்வேறு வகையான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கு.சுகிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) சி.ரத்தினவேல், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்)(பொ) சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்(பொ) உலகநாதன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News