ஏற்காடு மலைப்பாதை மண் சரிவு: சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆய்வு

தொடர் மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் ஆய்வு செய்தார்.

Update: 2021-10-12 05:45 GMT

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சுற்றுலா தளமான ஏற்காட்டில் நாள்தோறும் இரவு நேரங்களில் மழை பெய்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் ஏற்காடு மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே மண் சரிவு ஏற்பட்டது. சாலை மற்றும் தடுப்பு சுவர் கற்கள் சரிந்து கீழ் சாலையில் விழுந்த காரணத்தால் வாகன போக்குவரத்துக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது.

மண்சரிவு குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலையும் தொடர்ந்து மிதமான மழை பெய்த போதிலும் இரவு முழுவதும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனிடையே மண்சரிவு ஏற்பட்ட பகுதியைச் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் சீரமைப்பு பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 48 மணி நேரத்தில் சீரமைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் ஏற்காடு பகுதியில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகின்ற காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சீரமைப்பு பணிகள் முடியும் வரை ஏற்காடு குப்பனூர் சாலையைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் கேட்டுக்கொண்டார்.

மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மேற்கொண்டு சரிவு ஏற்படலாம் என்பதற்காக அடிவாரத்தில் உள்ள காவல்துறையின் சோதனை சாவடியிலேயே வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டுத் திருப்பி அனுப்பப்படுகின்றன.

Tags:    

Similar News