சேலம் ஏற்காடு சுங்கச்சாவடி ஏலம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சேலம் ஏற்காடு சுங்கச்சாவடி ஏலம் இரண்டாவது முறையாக மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-07 06:15 GMT

ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் மணிவாசகம் தலைமையில் நடைபெற்ற ஏலத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேலம் - ஏற்காடு சாலையில் அடிவாரம் பகுதியில் உள்ள சுங்கசாவடி ஏலம் எடுப்பதில் 21 பேர் டெபாசிட் செலுத்தியிருந்தனர்.

இதேபோல் ஏற்காடு - குப்பனூர் சாலையில் உள்ள சுங்கச்சாவடி ஏலம் எடுப்பதற்காகவும் பலர் வைப்பு தொகை செலுத்தியிருந்தனர். ஏற்கனவே கடந்த டிசம்பர் 29ஆம் தேதி திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்து  யார் எடுப்பது என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஏலம்  விடுவது ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த நிலையில் இன்று ஏலம் விடப்படும் என்று அறிவித்த நிலையில் திமுக, அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோர் ஏலம் எடுப்பதற்காக வருகை தந்தனர். இதையடுத்து ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் மணிவாசகம் தலைமையில் நடைபெற்ற டெண்டரில் டெபாசிட் கட்டாத திமுக அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் குமரவேல் என்பவர் உள்ளே நுழைந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து ஏலம் விடுவதில் முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக இன்றும் ஏலம் விடுவது மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அறிவிப்பு அறிவித்தார்.

Tags:    

Similar News