நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.1.37 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

சேலத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.1.37 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Update: 2024-09-16 09:14 GMT

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தலைமையில் இன்று (16.09.2024) நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும், பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனவும், குறிப்பாக பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில் மனுவின் மீது உரிய தீர்வு வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் 246 மனுக்கள் வரப்பெற்றன.

மேலும், மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தின் தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென நடத்தப்பட்டு வரும் குறைதீர் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 10 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 28 நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மூக்குக் கண்ணாடி உதவித்தொகை மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவிகள் என மொத்தம் ரூ.1,37,500/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) சிவசுப்பிரமணியன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில், துணை ஆட்சியர் (பயிற்சி)  ஆர். மாருதிபிரியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்  மகிழ்நன் உள்ளிட்ட அரசுத்துறை முதன்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News