மேட்டூர் அணை கிழக்கு, மேற்கு கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய்களில் திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது.

Update: 2024-04-11 02:45 GMT

மேட்டூர் அணை.

மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய்களில் திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. 

காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பாசனத்துக்குத் தேவையான நீரின் பெரும்பகுதியை இது வழங்குகிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்மை காரணமாக, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்த வண்ணம் உள்ளது . ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 200 கன அடியாக நீடிக்கிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று (10ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 85 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (11ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 43 கன அடியாக குறைந்துள்ளது.

இதனிடையே, அணையில் இருந்து கிழக்கு மேற்கு பாசன கால்வாய் செல்லும் பகுதிகளில், குடிநீர் தேவைகளுக்காக கடந்த மார்ச் 26ம் தேதி மாலை 4.30 மணி முதல் 15 நாட்களுக்கு வினாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து, தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. நேற்று  மாலையுடன் 15 நாட்கள் நிறைவடைந்தது. இதனையடுத்து, கிழக்கு, மேற்கு கால்வாய்களில் திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் ஆற்றில் 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், அணைக்கு வரும் நீரின் அளவை விட, நீர் திறப்பு பலமடங்கு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 57.30 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 57.03 அடியானது. நீர் இருப்பு 22.52 டிஎம்சியாக உள்ளது.

Tags:    

Similar News