மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று (மே.12) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 33 கன அடியாக அதிகரித்துள்ளது.

Update: 2024-05-12 04:45 GMT

மேட்டூர் அணை ‌

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று (மே.12) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 33 கன அடியாக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும் , தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கும் மேட்டூர் அணை காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. தமிழகத்தின் பாசனத்துக்குத் தேவையான நீரின் பெரும்பகுதியை இது வழங்குகிறது.

தற்போது, காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்தது. இதன் காரணமாக, ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,200 கன அடியாக அதிகரித்தது. இதனால், அங்குள்ள அருவிகளில் தற்போது மிதமாக தண்ணீர் கொட்டுகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 21 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 33 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீர்வரத்தைக் காட்டிலும் நீர் திறப்பு பலமடங்கு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 51.22 அடியாக இருந்த நீர்மட்டம்,  இன்று காலை 51.00 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 18.44 டிஎம்சியாக உள்ளது. மேலும், கடந்த 24 மணி நேர நிலவரப்படி மேட்டூர் பகுதியில் 7.8 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News