சேலத்தில் மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள்: மாணவர்கள் ஆர்வமுடன் வருகை

பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து சேலத்தில் மிகுந்த ஆர்வத்துடன் மாணவ மாணவியர் பள்ளிகளுக்கு வருகை.

Update: 2021-09-01 05:45 GMT

உடல் வெப்ப பரிசோதனை செய்யும் ஆசிரியர்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக காலவரையன்றி மூடப்பட்டிருந்த பள்ளிகள் முதல் அலைக்குப் பின்னர் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 9 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும்  திறக்கப்பட்டது. பின்னர்  கொரோனா  இரண்டாவது அலை காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது. தற்போது, இரண்டாம் அலை பரவல் குறைந்த்தை அடுத்து கல்வியாளர்கள், வல்லுனர்கள் மற்றும் பெற்றோர் கருத்துகளை கேட்டு அரசு வழிகாட்டுதல்படி இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்தை பொருத்தவரை 295 அரசு பள்ளிகள் உட்பட 611 பள்ளிகள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 83 ஆயிரம் மாணவ,மாணவியர் பயின்று வருகின்றனர். பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து மாணவ மாணவியர் மிகுந்த ஆர்வத்துடன் வருகை புரிந்தனர். பள்ளிக்கு வந்த மாணவ மாணவியருக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்ட பின்னர் வகுப்புக்கு  அனுமதிக்கப்பட்டனர். மாணவர் எண்ணிக்கை மற்றும் வகுப்பறைகளில் எண்ணிக்கை அடிப்படையில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போதிய வகுப்பறை இல்லாத பள்ளிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற அடிப்படையில் 10 , 12ம் வகுப்புகளுக்கு ஒருநாளும், 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு அடுத்த நாளும் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. 

பள்ளிக்கு வரும் மாணவ, மாவணவியர் உடல் வெப்பநிலை பரிசோதித்தல் அவசியம். முககவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளி கடைபிடித்தல் ஆகிய அடிப்படை விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும், உணவு இடைவேளை பிற்பகல் இடைவேளை மற்றும் வீட்டுக்கு செல்லும்போது கைகளை சோப்பு கொண்டு கழுவ வேண்டும், ஒரு வகுப்பிற்கு 20 முதல் 25 மாணவர்கள் மட்டுமே அமர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை  ஆசிரியர்கள் மாணவர்களுக்கு  அறிவுறுத்தினர்.

Tags:    

Similar News