சேலம் உருக்காலை வளாகத்தில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கை வசதி- அமைச்சர் நேரில் ஆய்வு

சேலம் உருக்காலை வளாகத்தில், ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 500 படுக்கைகள் அமைக்கும் பணியை, அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2021-06-04 02:30 GMT

சேலம் உருக்காலை வளாகத்தில்,  கூடுதலாக 500 படுக்கைகளை ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கும் பணி  நடைபெற்று வருகிறது. அதனை, அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் முதல்முறையாக சேலம் உருக்காலை வளாகத்தில், குழாய் வாயிலாக ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 20-ந்தேதி திறந்து வைத்தார். அந்த மையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சேலத்தில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கான தட்டுப்பாடு பெருமளவில் குறைக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில், சேலம் உருக்காலை வளாகத்தில்,  மேலும் 500 படுக்கைகளை ஆக்சிஜன் வசதியுடன் உருவாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, அப்பணிகள் தீவிரமாக இரவு பகல் பாராமல் நடைபெற்று வருகிறது. படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதற்கான கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது மின் இணைப்பு கட்டமைப்புகளை மின்வாரிய ஊழியர்கள் உருவாக்கி வருகின்றனர். இந்தப் பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, சிறப்பு சிகிச்சை மையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்த உத்தரவிட்டார்.

Tags:    

Similar News