இறப்பை மறைத்தவர்களே குற்றம் சாட்டுகிறார்கள்:பழனிசாமி பேச்சு குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி விமர்சனம்

கொரோனா இறப்பை யார் மறைத்து அரசியல் செய்தார்களோ தற்போது அவர்களே குற்றம்சாட்டுகிறார்கள் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி விமர்சனம் செய்தார்.

Update: 2021-05-28 22:45 GMT

சேலம் உருக்காலை வளாகத்தில் 500 ஆக்சிஜன் படுக்கையுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை

சேலம் உருக்காலை வளாகத்தில் 500 ஆக்சிஜன் படுக்கையுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


சேலம் உருக்காலை வளாகத்தில் 500 ஆக்சிஜன் படுக்கையுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை கடந்த 20ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிலையில் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இன்று முதல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணி துவங்கியது. இதனை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது,

முதல்வரின் உத்தரவை அடுத்து 12 நாட்களில் கொரோனா சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டு தற்போது நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்ற 21 நாளில் நோய்பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.

சேலத்தில் மொத்தம் 11,500 படுக்கைகள் உள்ளன.  3800 படுக்கைகள் மட்டுமே உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறாரே ஆனால் 6308 பேர் சேலம் மாவட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

இதர நபர்கள் சாலையிலா உள்ளார்கள் என அமைச்சர் கேள்வி எழுப்பினார். மேலும் 7000 பேர் வீட்டில் சிகிச்சையில் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் சேலத்தில் சராசரியாக 1,412 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது நாள்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேல் பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. 

எடப்பாடி முதல்வராக இருந்த போது நாள் ஒன்றுக்கு 9.95 KL மட்டுமே சேலத்திற்கு ஆக்சிஜன் கிடைத்தது. தற்போது 27  KL ஆக்சிஜனை தமிழக அரசு ஆக்சிஜன் வழங்கி வருகிறது.

அரசியல் இன்றி நோய் தொற்றில் இருந்து பொதுமக்களை காக்க வேண்டும் என்பதே முதல்வரின் இலக்கு. சேலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை இல்லை என்கிற நிலையே இல்லை. தேவையான அளவு கூடுதல் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கொரோனாவை வைத்து எடப்பாடி பழனிச்சாமி அரசியல் செய்கிறார். 

எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு நல்ல ஆலோசனை வழங்கினால் அரசு ஏற்கும். கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கவில்லை. அரசு விதிப்படி அடக்கம் செய்யப்பட்டு வருகிறது.

யார் இறப்பை மறைத்து அரசியல் செய்தார்களோ தற்போது அவர்களே குற்றம் சாட்டுகிறார்கள்.கடந்த அரசு முதல் அலையில் போர்கால அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகளை எடுத்து இருந்தால் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்திருக்காது. 

தமிழகத்திற்கு தேவையான மருத்துவ கட்டமைப்பை தமிழகத்தில் உருவாக்க முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள்தான் உள்ளது.

விரைவில் பூஜ்ஜியம் ஆகும். முதல்வர் ஸ்டாலின் மார்ச் 9 ல் தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ மார்ச் 11 ல் தான் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அவர்தானே முதலில் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும்.நோய் தடுப்பு பணியில் அரசியல் வேண்டாம் ; முதல்வருக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

Tags:    

Similar News