சேலத்தில் நீட் பயிற்சி மையத்திற்கு சீல், 5000 அபராதம்

சேலத்தில் தடையை மீறி நடத்தப்பட்ட நீட் பயிற்சி மையத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் 5000 அபராதம் விதித்து, சீல் வைத்தனர்

Update: 2021-04-28 14:30 GMT

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக பள்ளிகள்,கல்லூரிகள்,பயிற்சி மையங்கள் உள்ளிட்டவைகள் செயல்படக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் தடையை மீறி, 200 மாணவர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி அஸ்தம்பட்டி மண்டல உதவி ஆணையாளர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சில மாணவர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் பயிற்சிக்கு வந்த மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து நீட் பயிற்சி மையத்தை மூடி சீல் வைத்தனர். மேலும் அரசின் தடையை மீறி நீட் பயிற்சி மையம் நடத்திய உரிமையாளர் சிவகுமாருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் மாநகராட்சி அதிகாரிகள் பயிற்சி மையத்தை நடத்தி வந்த உரிமையாளரை கடுமையாக எச்சரித்தனர்.

Tags:    

Similar News