சேலம் மாநகராட்சியில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

சேலம் மாநகராட்சி பகுதியில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனையை மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தார்.

Update: 2021-08-09 13:45 GMT

ஐந்து ரோடு சந்திப்பில் நடைபெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கான கொரோனா பரிசோதனை முகாமினை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தார்.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா, கொண்டலாம்பட்டி ரவுண்டானா, ஏற்காடு செல்லும் சாலை, கோரிமேடு, அஸ்தம்பட்டி உழவர்சந்தை, வாசக சாலை, சின்னதிருப்பதி உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளில் தற்காலிக கொரோனா பரிசோதனை முகாம் ஏற்படுத்தப்பட்டு அனைத்து பொதுமக்களுக்கும் பரிசோதனை தினந்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக  கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்து மூலம் ஐந்துரோடு சந்திப்புக்கு வருகை தந்து, அங்கிருந்து தாங்கள் பணிபுரியும் இடங்களுக்கு செல்கிறார்கள். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வது மிகவும் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு ஐந்துரோடு சந்திப்பில் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐந்து ரோடு சந்திப்பில் நடைபெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கான கொரோனா பரிசோதனை முகாமினை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தார்.

இந்த முகாமில் கட்டுமானத் தொழில் பணி புரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை (ஆர் டி பி சி ஆர் டெஸ்ட் ) மேற்கொள்வதோடு, அவர்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசமும் வழங்கப்படுகிறது. பரிசோதனை முகாமிற்கு வரும்பொழுது காய்ச்சல் கண்டறியும் கருவியின் மூலம் உடல்வெப்பநிலை பரிசோதனையும் செய்யப்படுகிறது. இந்த முகாம் இன்று முதல் பத்து நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும். எனவே, கட்டுமானத் தொழில் புரிய செல்லும் அனைவரும் இந்த முகாமிற்கு வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News