சேலம்: 289 பேருக்கு கொரோனா பாதிப்பு -2 பேர் பலி

சேலம் மாவட்டத்தில் 289 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மூதாட்டி உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Update: 2021-04-18 10:35 GMT

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த சில நாட்களாக கொரோனாவுக்கு உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 214 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று 289 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 137 பேர், ஓமலூரில் 20 பேர், ஆத்தூரில் 17 பேர், வீரபாண்டியில் 16 பேர், தாரமங்கலத்தில் 13 பேர், காடையாம்பட்டியில் 11 பேர், சேலம் ஒன்றியத்தில் 10 பேர், எடப்பாடி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 8 பேர், சங்ககிரி, அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 7 பேர், நங்கவள்ளியில் 6 பேர், கெங்கவல்லியில் 5 பேர், கொளத்தூரில் 4 பேர், மேச்சேரி, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், தலைவாசல், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், கொங்கணாபுரம், மகுடஞ்சாவாடி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 639 ஆக அதிகரித்துள்ளது.

ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 149 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 1,452 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சேலத்தை சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதேபோல் சேலத்தை சேர்ந்த 74 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி தனியார் ஆஸ்பத்திரியில் பலியானார்.

Tags:    

Similar News