குட்கா வழக்கில் விரைவில் குற்றவாளிகள் சிக்குவர்: சேலம் காவல் ஆணையாளர்

சேலத்தில் குட்கா, புகையிலை பறிமுதல் செய்த வழக்கில் விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவர் என்று, மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா தெரிவித்தார்.

Update: 2021-07-30 06:57 GMT

சேலத்தில், குட்கா, புகையிலை பொருட்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, சேலம் மாநகர காவல் ஆணையர் நேரில் பார்வையிட்டார்.

தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த சேலம் மாநகர காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை மற்றும் தொடர் ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேலம் அம்மாபேட்டை பகுதியில், காவல் உதவி ஆணையாளர் ஆனந்தகுமார் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது புறவழி சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை சோதனை செய்ததில் மாட்டு தீவன மூட்டைகளுக்கு இடையே குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து லாரி, சரக்கு ஆட்டோ மற்றும் அதிலிருந்த போதைப்பொருள் மூட்டைகள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று, அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சீலநாயக்கன்பட்டி பகுதியில், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு லாரிகளை, சோதனை செய்ததில் அதில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாநகர காவல் துணை ஆணையாளர் மோகன்ராஜ் உத்தரவின் பேரில், இரண்டு லாரிகள் மற்றும் புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

அன்னதானப்பட்டியில் சுமார் 7300 கிலோ எடை கொண்ட 248 மூட்டைகள் மற்றும் அம்மாபேட்டை பகுதியில், 2397 கிலோ எடை கொண்ட 72 மூட்டைகள் என இருவேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் மொத்த மதிப்பு 1 கோடியே 35 லட்சம் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் புகையிலைப் பொருட்களை சேலம் மாநகர காவல் ஆணையர் நேரில் பார்வையிட்டு  காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 4 பேர், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்விரு சம்பவங்களிலும் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் கூறினார்.

Tags:    

Similar News