சேலத்தில் செல்போன் பறிக்க முயற்சி: துரத்திப்பிடித்த மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநர்
சேலத்தில் செல்போன் பறித்த இருசக்கர வாகனத்தில் தப்பிய இருவரை மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுனர் துரத்திச்சென்று பிடித்துள்ளார்.;
கொள்ளையர்களை விரட்டிப்பிடித்த ஆட்டோ ஓட்டுநர் தங்கதுரை.
சேலம் நாம மலை அடிவாரம் பேருந்து நிறுத்தத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அத்த நபரிடம் இருந்து செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால் செல்போன் கீழே விழுந்ததால் உடனடியாக அங்கிருந்து தப்பி சென்னறர்.
இதனை அருகில் இருந்து கவனித்த ஆட்டோ ஓட்டுநர் தங்கதுரை, உடனடியாக தனது ஆட்டோவில் துரத்திசென்று கொள்ளையர்களின் இருசக்கர வாகனத்தில் மோதி, அவர்களை கீழே தள்ளிவிட்டு அவர்களில் ஒருவரை பிடித்துள்ளார். மற்றொருவர் தப்பி ஓட முயன்றபோது அங்கிருந்த பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்தனர்.
இருவரையும் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் பச்சப்பட்டி பகுதியை சேர்ந்த அகமதுபாட்ஷா மற்றும் பக்தவச்சலம் என்பது தெரியவந்தது. பிடிபட்ட நபர்களிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சில்லரை காசுகள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
கைதானவர்கள் மீது, ஏற்கனவே செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் பதிவுசெய்யப்படடுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கொள்ளையர்களை விரட்டிப்பிடித்த ஆட்டோ ஓட்டுநர் தங்கதுரை கால் ஊனமான மாற்றுத்திறனாளி. அவரது வீரச்செயலை காவல்துறையினர் வெகுவாக பாட்டினர்.