சகஜநிலை திரும்பியதும் மின்துறை ஊழல்கள் வெளிக்கொண்டு வரப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி

கொரோனாவில் இருந்து மீண்டு, தமிழகம் சகஜ நிலைக்கு திரும்பியது மின்சாரத்துறையில் நடந்த ஊழல் வெளிக்கொண்டு வரப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி, சேலத்தில் தெரிவித்தார்.

Update: 2021-06-03 13:23 GMT

அமைச்சர் செந்தில் பாலாஜி

சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம், இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தவறான கொரோனா பரிசோதனை முடிவுகளை அளித்த இரு தனியார் ஆய்வகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தவறு செய்யும் தனியார் ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்களின் ஒப்புகை சீட்டு இல்லாமல் மருந்து கொடுத்தால் மருந்தகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் இல்லை என்ற நிலையே இல்லை. மாவட்டம் முழுவதும் நோய் தடுப்பு பணியில் 15,000 பேர் பணியாற்றி வருகின்றனர். விரைவில் கொரோனா பரவல், பூஜ்ஜியம் நிலைக்கு வரும். ஒரு வாரத்தில் இரும்பாலையில் கூடுதல் 500 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுவிடும்.

முந்தைய ஆட்சியாளர்கள் உரிய மின் பராமரிப்பு பணிகளை செய்யவில்லை. எனவே ஊரடங்கு முடியும் வரை மின் பராமரிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவசர, அவசிய தேவைகளுக்கு மட்டுமே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் 100 சதவீதம் மின்தடை இருக்காது.

அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையத்திற்கு கொரோனா சிகிச்சைக்காக தடையில்லா உயர் அழுத்த மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனாவில் இருந்து மீண்டு தமிழகம் சகஜ நிலைக்கு திரும்பியதும், மின்சாரத்துறையில் நடந்த ஊழல் வெளிக்கொண்டு வரப்படும் என்று, அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News