நூற்பாலையைத் திறக்க வேண்டி போராட்டம்

சேலத்தில் மூடப்பட்டுள்ள கூட்டுறவு நூற்பாலையைத் திறக்க வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-02-04 14:00 GMT

சேலம் அம்மாபேட்டையில் கூட்டுறவு நூற்பாலை செயல்பட்டு வந்தது. இதில் சுமாா் 1,600-க்கும் மேற்பட்டோா் நேரடியாகவும், பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோா் மறைமுகமாகவும் பயனடைந்து வந்தனா். இந்த நிலையில் கடந்த 2002 ம் ஆண்டு ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது. நூற்பாலையைத் திறக்க வலியுறுத்தி, பணியாளா்கள் மற்றும் நெசவாளா்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். இந்தநிலையில் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் சேலம் கூட்டுறவு நூற்பாலையைத் திறக்க வேண்டும், எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி ஆலையை மூடியதால் பாதிக்கப்பட்ட தொழிலாளா்களுக்கு சட்டப்படி இழப்பீடு வழங்க வேண்டும், நூற்பாலை மூடியுள்ள நிலையில் சட்ட விரோதமாக எந்த ஒரு அறிவிப்பும் இன்றி பொருள்களை கொள்ளையடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுத்து வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட பஞ்சாலை தொழிலாளா் சங்கம், கைத்தறி தொழிலாளா்கள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்க நிா்வாகி மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நெசவாளா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டு சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். நெசவு தொழிலுக்கு புகழ்பெற்ற சேலத்தில் தற்போது நெசவுத்தொழில் முழுவதும் அழிந்து வருவதால் சேலம் கூட்டுறவு நூற்பாலையை திறந்து நெசவு தொழிலை பாதுகாக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News