தமிழக முதலமைச்சருக்கு நன்றி பாராட்டிய கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தினர்

ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாள்களுக்குள் கோவில் பூசாரிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வருக்கு பாராட்டு

Update: 2021-10-23 13:15 GMT

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை அன்று (22-10-2021) மாண்புமிகு தமிழக முதல்வர் நேரில் சந்தித்து இந்த திரிசூலத்தை சேலத்தை தலைமை இடமாகக் கொண்ட கோவில் பூசாரிகள் நலச் சங்க மாநிலத் தலைவர் பி. வாசு பூசாரி வழங்கினார். மேலும்தமிழக முதல்வரை பாராட்டி வாழ்த்து மடலும் தமிழர் இலக்கிய வரலாறு மற்றும் இந்தியத் திருவிழாக்கள் ஆகிய நூல்களும் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின்போது பூசாரியின் குரல் ஆசிரியர் த.புருஷோத்தமன் மற்றும் பொருளாளர் பி.வி. குணசேகரன் ஐயர் ஆகியோர் உடன் இருந்தனர். ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாள்களுக்குள் கோவில் பூசாரிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சாதனை படைத்த தமிழக முதல்வருக்கு  நன்றி தெரிவிக்கும் விதமாக  சேலத்தை தலைமை இடமாகக் கொண்ட கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் சார்பில் முத்தலை வேல் (திரிசூலம்) வழங்கப்பட்டது.

இது தொடர்பாக கோவில் பூசாரிகள் நலச்சங்க மாநிலத் தலைவர் பி. வாசு பூசாரி கூறியதாவது:  கிராமப்புற திருக்கோவில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற 60 வயதுக்கும் மேற்பட்ட பூசாரிகளின் ஓய்வூதியத்தை ரூ. 4000 ஆக உயர்த்த வேண்டும்; ஒரு கால பூஜை நடைபெறும் திருக்கோவில்களுக்கான வைப்பு நிதியை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும். ஒரு கால பூஜை நடைபெறும் திருக்கோவில்களில் பணியாற்றிவரும் சுமார் 12,959 பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும்; தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதிகளில் உள்ள திருக்கோவில் திருப்பணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிதி உதவியை ரூ. 2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக சேலத்தை தலைமை இடமாகக் கொண்ட கோவில் பூசாரிகள் நலச்சங்கம் விடுத்த கோரிக்கைகளை ஏற்று, தமிழக முதல்வர்படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருவது மிகுந்த பாராட்டுக்கு உரியது.

சேலத்தை தலைமை இடமாக கொண்ட கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் மேற்குறிப்பிட்ட இக்கோரிக்கைகளின் அடிப்படையில் பூசாரிகளின் ஓய்வூதியத்தை ரூ 4,000 ஆக உயர்த்தியும் ஒரு கால பூஜை நடைபெறும் திருக்கோவில்களுக்கு வைப்பு நிதியை ரூ. 2 லட்சமாக அதிகரித்தும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதிகளில் உள்ள திருக்கோவில்களுக்கு திருப்பணி நிதியை ரூ. 2 லட்சமாக உயர்த்தியும் ஒருகால பூஜை நடைபெறும் திருக்கோவில்களில் பணியாற்றிவரும் 12,959 பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை ரூ. 1000 வழங்கவும் ஆணை பிறப்பித்த  முதலமைச்சருக்கு கோவில் பூசாரிகள் நலச் சங்கம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.

கோவில் பூசாரிகளுக்கு பல பல நலத்திட்ட உதவிகளை வழங்கி  சாதனை படைத்து வருகிறார் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அண்மையில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்கள் பெருவாரியாக பெற்ற வெற்றிக்கு சேலத்தை தலைமை இடமாக கொண்டு கோவில் பூசாரி நலச்சங்கம்உறுதுணையாகச் செயல்பட்டது. எதிர்வரும் பேரூராட்சி நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல்களிலும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் அமோக வெற்றிபெற பூசாரிகள் அனைவரும் உறுதுணையாகச் செயல்படுவார்கள் என்றும் கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. வாசு பூசாரி தெரிவித்தார்.






Tags:    

Similar News