சினிமா பாணியில் புல்லட்டை ஓட்டிப்பார்ப்பதாக கூறி எஸ்கேப் ஆன காதல் ஜோடி

திரைப்படத்தில் வரும் வடிவேல் காமெடி பாணியில் சேலத்தில் டுவீலருடன் எஸ்கேப் ஆன காதல் ஜோடியை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2022-01-23 04:45 GMT

புல்லட்டை திருடி சென்ற காதல் ஜோடி வாகனங்களை பார்வையிடும் சிசிடிவி கேமிரா பதிவு

சேலம் டவுன் சாந்தி தியேட்டர் பகுதியில் ராம்பாலாஜி என்பவருக்கு சொந்தமான, பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி, விற்பனை செய்யும் கன்சல்டிங்  உள்ளது.  இந்த கன்சல்டிங் கடைக்கு வெள்ளிக்கிழமை  இரண்டு  இளம் ஜோடியினர் வந்துள்ளனர் . ஒரு புல்லட் ஒன்று வாங்க வந்திருப்பதாக கூறி, அங்கிருந்த விலை உயர்ந்த டுவீலர்களை அவர்கள் சிறிது நேரம் பார்வையிட்டுள்ளனர்.

இதில் 1.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு  டுவீலரை தேர்வு செய்துள்ளனர் . பின்னர் வண்டியை , ஓட்டிப்பார்த்து விட்டு வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.  கடை ஊழியர்களும், இன்னொரு ஜோடி இருக்கிறதே என்ற எண்ணத்தில் நம்பி வண்டியை எடுத்துப்போக அனுமதித்துள்ளனர் . நீண்ட நேரம் ஆகியும் வண்டியை எடுத்து கொண்டு ஜோடியாக சென்றவர்கள் மீண்டும் திரும்ப வில்லை .

திரைப்படத்தில்  நடிகர் வடிவேலு ஓட்டிப்பார்த்து விட்டு  வாங்கிக் கொள்வதாக கூறி டூவிலர் மற்றும் ஆட்டோவுடன் எஸ்கேப் ஆவார் . அதே பாணியில் இந்த ஜோடியும் எஸ்கேப் ஆகி விட்டனர் . நீண்ட நேரம் ஆன நிலையில் திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் , இன்னொரு ஜோடியிடம் அவர்களை தொலைபேசியில் அழைக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால் ' அவர்கள் யார் என்றே எங்களுக்கு தெரியாது ' என்றும் , ' நாங்கள் தனியாக வந்துள்ளோம் ' என்றும் கூறியுள்ளனர் .

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், கடை உரிமையாளர் ராம்பாலாஜிக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் கடையில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் பதிவான காட்சிகளை  பார்த்து,  இரண்டு ஜோடிகளுக்கும்  தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்த ஊழியர்கள், கடையில் இருந்த இன்னொரு ஜோடியை பிடித்து டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்து ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரித்தபோது,  வண்டியில் சென்ற பெண்ணை மட்டும் எங்களுக்கு தெரியும் என பிடிபட்ட ஜோடி கூறியுள்ளனர் . அதன் பேரில் தகவல் தெரிவிக்கப்பட்டு, வண்டியில் சென்ற பெண்ணின் உறவினர்கள் டவுன் குற்றப்பிரிவுக்கு வந்தனர் .

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வண்டியை ஓட்டிச்சென்ற வாலிபர் கிருஷ்ணகிரி அருகில் உள்ள குப்பத்தை சேர்ந்த பிரவின்குமார் என்பது தெரியவந்துள்ளது . வண்டியில் சென்ற பெண் அவரை காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் டவுன் குற்றப்பிரிவு போலீசார் , வண்டியை எடுத்துச் சென்ற காதல் ஜோடியை தேடி வருகின்றனர் . திரைப்பட பாணியில் நடந்த இந்த மோசடி சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News