காவல் துறையினர் தாக்கியதாக கலெக்டரிடம் புகாரளிக்க வெளிமாநிலத்தவர் ரகளை

காவல் துறையினர் தாக்கியதாக கலெக்டரிடம் புகாரளிக்க வெளி மாநிலத்தவர் ரகளையில் ஈடுபட்டதால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-05 19:15 GMT

ரகளையில் ஈடுபட்ட வெளிமாநிலத்தவர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் வந்த நபர் திடீரென அங்கும் இங்குமாக ஓடி சட்டையை கழற்றி ஆக்ரோசமாக கூச்சலிட்டார்.  மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த நபரின் செயலைக் கண்டு அவரை பிடிக்க முயன்றனர்.

ஆனால் காவல்துறைக்கு சவால் விடுக்கும் வகையில் அங்கிருந்து தப்பிச் சென்றார். மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொண்ட அந்த நபர் தனது செல்போனை அங்கேயே விட்டுச் சென்றுள்ளார். அவரது செல்போனில் பதிவில் இருந்த எண்களைக் கொண்டு அந்த நபர் குறித்த விவரங்களை காவல்துறையினர் விசாரித்தனர். 

அப்போது அவர் பெயர் தனிஷ் நாயர் என்றும், ஹைதராபாத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அலுவல் ரீதியாக சேலம் மாவட்டம் ஏற்காடு வந்ததாகவும் கூறப்பட்டது. காவல்துறையினர் விவரங்களை சேகரித்து ஒருபுறம் இருக்கையில் மீண்டும் அந்த நபர் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் சட்டையை கழட்டிவிட்டு சாலையின் நடுவே வாகனங்களின் வேகத்தை கூட பொருட்படுத்தாமல் ஓடிச் செல்வதும், வாகனங்களை மறிப்பதும் காவல்துறையினரை கண்டவுடன் தப்பி ஓடினார். திடீரென தனியார் பேருந்தின் மீது ஏறி நின்று பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் அவர் தானாக இறங்கி வந்து காவல்துறையினரின் பிடியில் சிக்காமல் போக்கு காட்டினார். 

மீண்டும் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து அந்த நபரை காவல்துறையினர் பிடித்தனர். ஆனால் அடுத்த கட்டமாக அவர் என்ன செய்வது என்று தெரியாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர வைத்தனர் காவல்துறையினர். அப்போது ஆங்கிலத்தில் பேசிய அந்த நபர் தான் ஒரு பட்டதாரி என்றும் தன்னை காவல்துறையினர் கடுமையாக தாக்கினர். எதற்காக தன்னை தாக்கினார்கள் என்பது குறித்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

காவல்துறையினரின் நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அல்லது காவல் ஆணையாளர் இடமோ தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே தான் வந்ததாகவும் புலம்பினார். அந்த நபரின் நடவடிக்கையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் கூடினர். ஆனால் காவல்துறையினர்  எதையும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக அவரை விட்டுச் சென்றனர். மேலதிகாரிகளின் உத்தரவு இல்லாமல் தங்களால் ஒன்றும் செய்ய இயலாது எனவும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டது. 

இதனால் அந்த நபர் மீண்டும் அங்கிருந்து தப்பிச்சென்று வழக்கம்போல் சாலையில் அங்குமிங்குமாக ஓடினார். இது போன்ற நபர்களை எப்படி கையாள்வது என்பது கூட தெரியாமல் சேலம் மாநகர காவல் துறையினர் அலட்சியமாக நடந்து கொண்டது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

வெளி மாநிலத்தை சேர்ந்த நபர் எதற்காக சேலம் வந்தார்.அவர் அளவுக்கு அதிகமான போதை பொருட்களை ஏதும் பயன்படுத்தினாரா அல்லது அவர் மன ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளாரா அவருக்கு நேர்ந்தது என்ன என்பது குறித்து காவல்துறையினர்தான் விசாரித்து தீர்வு காணவேண்டும்.

Tags:    

Similar News