தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினால் வழக்குப்பதிவு: காவல்துறை எச்சரிக்கை

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினால் கட்சி பாகுபாடு இன்றி வழக்கு பதிவு செய்யப்படும் என சேலம் மாநகர காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

Update: 2022-01-29 12:15 GMT

கூட்டத்தில் பேசிய சேலம் காவல் உதவி ஆணையாளர் முருகேசன்

தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் மாநகர காவல் உதவி ஆணையாளர் முருகேசன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அஸ்தம்பட்டி மண்டலத்திலுள்ள 14-வார்டுகளை சேர்ந்த திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய காவல் உதவி ஆணையாளர் முருகேசன், தேர்தல் பிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் கட்டாயம் தேர்தல் நடத்தை விதி முறைகளையும், கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டால் கட்சி பாகுபாடின்றி வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்த அவர் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து புகார் தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் அஸ்தம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News