10 நாளாக தெருக்களில் மழைநீர் தேக்கம்: கலையுமா அதிகாரிகளின் உறக்கம்?

சேலம் எருமாபாளையம் பகுதியில், தெருக்களில் தேங்கியிருக்கும் தண்ணீரால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-10 12:30 GMT

 நோய் பரவும் அபாயம்: எருமாபாளையம் அருகே ராஜாபிள்ளைகாடு பகுதியில் பத்து நாட்களுக்கும் மேலாக மழை நீர் தேங்கி நிற்பதால், சுகாதாரக்கேடு நிலவுகிறது.

சேலத்தில்,  கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால்,  மாவட்டம் முழுவதும் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கிறது. சேலம் நகரில், எருமாபாளையம் அருகே ராஜாபிள்ளைகாடு பகுதியில் பத்து நாட்களுக்கும் மேலாக மழை நீர் தேங்கி நிற்கிறது.

இதனால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தகவல் தெரிவித்தும்,  தெருக்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தேங்கியுள்ள தண்ணீரில் பச்சை நிறத்தில் பாசி படிந்து காணப்படுவதோடு, துர்நாற்றம் வீசுவதால் பல்வேறு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 22 ஆண்டுகளாக இப்பகுதியில் போதிய சாக்கடை வசதி இல்லாததால்,  அவ்வப்போது மழை காலங்களில் இதுபோன்ற இன்னல்கள் நீடித்து வருவதாகவும்,  இதற்கு நிரந்தரத் தீர்வாக சாக்கடை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும்,  அப்பகுதி மக்கள்,  அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News