பனைமரத்தில் பதநீர் இறக்க அனுமதிக்க பனை தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
பனை மரத்தில் இருந்து பதநீர் எடுக்க அனுமதக்க வேண்டும் என்று பனை தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.;
பதநீர் எடுக்க அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு அளிக்க வந்த பனை தொழிலாளர்கள்.
பனை மரத்தில் பதநீர் இறக்க அனுமதிக்க கோரி பனைத் தொழிலாளர்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 62 ஆரம்ப பனைவெல்லக் கூட்டுறவு சங்கம் மூலம் 15,000 பனைத் தொழிலாளர்கள், அரசின் உரிமம் பெற்று பனை மரத்திலிருந்து பதநீர் இறக்கி பனை வெல்லம் உற்பத்தி செய்து வருகின்றனர்.
ஆனால் தற்போது அரசின் உரிமம் இருந்தாலும் கூட பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்க காவல்துறையினர் அனுமதி மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து சேலம் மாவட்ட பனை வெல்லக் கூட்டுறவு விற்பனை சம்மேளனம் சார்பில் பனை மரத்திலிருந்து பதநீர் இறக்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பனைத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். டிசம்பர் முதல் ஜூன் வரை பருவ காலம் என்பதால் அரசு காலம் தாழ்த்தாமல் பதநீர் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.