தோல்வி பயத்தில்தான் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் அறிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் ரத்து செய்ய வேண்டும்

Update: 2021-11-20 23:30 GMT

சேலத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு தலைமையில் 100 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். 

தோல்வி பயம் காரணமாகவே வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் அறிவித்துள்ளதாகவும் விவசாயிகளின் நலனுக்காக அல்ல என முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி. தங்கபாலு தெரிவித்தார்.

மத்திய அரசு கடந்த ஆண்டு புதிதாக கொண்டுவந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில் இதற்கான போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளை போற்றும் வகையில் சேலத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி. தங்கபாலு தலைமையில் 100 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.வி. தங்கபாலு, அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களில் தொடர் தோல்வியை சந்தித்து வந்த மத்திய பாஜக அரசு எதிர்வரும் தேர்தல்களில் தோல்வி  ஏற்படும் என்ற அச்சத்தில்தான் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இது விவசாயிகளின் நலனுக்காக அல்ல.  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் ரத்து செய்ய வேண்டும் என்றார்.

பாஜக அரசின் இந்த அறிவிப்பால் எதிர்வரும் தேர்தல்களில் அக்கட்சி வெற்றி பெற போவதில்லை எனவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் தொடரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க தற்போதுள்ள சட்டங்களும் தண்டனைகளும் போதாது.  மிகவும் கடுமையான சட்டங்களும் தண்டனைகளுமே தேவை என்றார் தங்கபாலு.

Tags:    

Similar News