பாமக வெற்றி பெற்றால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு தான்: அன்புமணி

பூரண மதுவிலக்கு என்பதை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சொல்ல முடியுமா? என அன்புமணி கேள்வி எழுப்பினார்.

Update: 2022-02-16 07:30 GMT

கூட்டத்தில் பேசும் அன்புமணி ராமதாஸ்.

சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாமக சார்பாக மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகியவற்றில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்பது சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலை விட மிகவும் முக்கியமான தேர்தல், மக்களுடைய நேரடி தொடர்புடையது. பாமக மக்களின் முன்னேற்றத்திற்கு தேவைப்படும். பாமகவிற்கு வாக்களியுங்கள். பாமக வேட்பாளர்கள் வெற்றி பெற்று மேயரானால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு தான். இதை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சொல்ல முடியுமா?.

பாமக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் மக்களை தேடி வருவார்கள். அரை நூற்றாண்டு திமுக, அதிமுக ஆட்சி செய்துள்ளது. எந்த முன்னேற்றமும் இல்லை. மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. சேலம் மாநகரில் உள்ள உயர்மட்ட பாலங்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு போக்குவரத்து நெரிசல் காரணமாக மேம்பாலம் இடிக்கும் சூழல் வரும்.

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் திட்டமிடுதல் கிடையாது. மக்களுக்கு தேவையானதை செய்ய மாட்டார்கள். சாலை அமைத்தால் கமிஷன் வரும் அது மட்டும் தான் திமுக, அதிமுக 2 கட்சிகளுக்கு தெரியும்.உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் நேரடியாக ஒவ்வொரு ஊர்களாக, கிராமங்களாக வந்து மக்களை சந்திக்க வருவேன். பாமகவிற்கு ஒரு வாய்ப்பை தாருங்கள் மாற்றத்தை ஏற்படுத்தி காட்டுகிறோம்.

மேட்டூர் உபரிநீரை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரது தொகுதியில் உள்ள ஏரிக்கு மட்டும் எடுத்து சென்று விட்டார். மற்ற ஏரிகளுக்கு செல்லவில்லை. மேட்டூர் உபரிநீர் திட்டம் நான் முதல்வராக இருந்திருந்தால் 2 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றிருப்பேன். நீர் மேலாண்மை பற்றி திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தெரியாது. நான் பேசிய பின்னர் தான் அவர்கள் பேசினார்கள்.

நீட் தேர்வு கொண்டு வந்தது குறித்து திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் யார் கொண்டு வந்தது என்பது குறித்து விவாதம் நடத்தலாம் என்று முதல்வர், முன்னாள் முதல்வர் ஆகியோர் மாறி மாறி பேசி வருகிறார்கள். நானும் இந்த விவாததிற்கு வருகிறேன். நீட்தேர்வு கொண்டு வந்தது யார்? என்பது குறித்து தேர்தல் முடிந்த பிறகு மேடை அமைத்து விளக்கமாக பேசிகிறேன். நீட்தேர்வை திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகள் தான் கொண்டு வந்தது. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிக்கு வளர்ந்து வரும் நாடுக்கு என்ன தேவை என்பது குறித்து திட்டமிடுதல் தெரியவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

Tags:    

Similar News