அதிமுக வேட்பாளர்களை தோல்வியடையுற்றதாக அறிவிக்க சூழ்ச்சி : எடப்பாடி பழனிசாமி

ஆட்சியாளர்களுக்கு அலுவலர்கள் துணையாக செயல்படவில்லை என்றால் அந்த இடத்தில் நீடிக்க முடியாது என மிரட்டல் விடுக்கப்படுகிறது

Update: 2022-02-21 13:00 GMT

சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றதாக அறிவிக்க சூழ்ச்சி நடப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து முதலமைச்சர் தனது கடிதத்தில் எழுதியுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். சென்னையில் கள்ள ஓட்டு போட முயன்ற ஒருவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். முதலமைச்சர் ஸ்டாலின் இதை தவறு என்கிறாரா. கள்ள ஓட்டு போட முயன்ற குற்றவாளிகளுக்கு முதலமைச்சரே துணைபோவது வேடிக்கையாக உள்ளது. ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது போடப்பட்டுள்ள எந்த வழக்கினையும் சட்டரீதியாக சந்திக்க தயாராக இருகிறோம். வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலு,ம் தோல்வியுற்றதாக அறிவிக்க சூழ்ச்சி நடக்கிறது.  இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கும் அலுவலர்களுக்கும் வாய்மொழி உத்தரவு வந்திருப்பதாக தெரியவந்துள்ளது.  

நீதிமன்ற உத்தரவுப்படி ஒவ்வொரு வார்டுக்கும் வாக்கு எண்ணிக்கை முடிந்த உடன் முடிவுகளை அறிவிக்க வேண்டும். இதில் தவறு நேர்ந்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையர்களும், தேர்தல் அலுவலர்களும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நடந்து கொள்ள வேண்டும்; ஆட்சியாளர்களுக்கு உடந்தையாக இல்லாமல் ஜனநாயக முறைப்படி நடுநிலையோடு செயல்பட வேண்டும் இல்லாவிட்டால் அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆட்சியாளர்களுக்கு அலுவலர்கள்  துணையாக செயல்படவில்லை என்றால் அந்த இடத்தில் நீடிக்க முடியாது என மிரட்டல் விடுக்கப்படுகிறது. அமைச்சர் செந்தில்பாலாஜி நல்லவர் போல் நாடகத்தை அரங்கேற்றுகிறார். அவர் கோவை  மாவட்ட திமுக பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட நாள்முதல் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.  தனது தவறுகளை மறைத்துக்கொள்ள  அதிமுகவினர் மீது பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டது. அதிமுகவுக்கு எப்போதும் தோல்வி பயம் கிடையாது. திமுகதான் தோல்வி பயத்தில் உள்ளது என்றார் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Tags:    

Similar News