நிலத்தை அபகரிக்க திமுக பஞ்., தலைவர் முயற்சி: போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார்
வீராணம் அருகே நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக திமுக பஞ்சாயத்து தலைவர் மீது போலீஸ் கமிஷனரிடம் பெண் புகாரளித்துள்ளார்.;
சேலம் மாவட்டம், வீராணம், கோராத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் மனைவி முனியம்மாள். இவர்களின் மகன்கள் கனகராஜ் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் வெளியூரில் வேலை செய்து வருகின்றனர். கணவன் மனைவி இருவரும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி மகன் நடராஜ் உடன் வசித்து வருகின்றனர்.
முனியம்மாள் தனக்கு சொந்தமான தோட்டத்து நிலத்திற்கு அருகில் 12 செண்ட் நிலத்தை 2005ல் விலை கொடுத்து வாங்கியுள்ளார். இந்த நிலத்திற்கு அருகில் உள்ள சக்திவேல் மற்றும் கோராத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவரும், திமுக ஊராட்சி கழக செயலாளருமான சுப்ரமணி உள்ளிட்டோர் 12 சென்ட் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக வீராணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார்மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் முனியம்மாளுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.
இந்தநிலையில், சுப்ரமணி மற்றும் சக்திவேல் மீண்டும் நெருக்கடி கொடுத்து வந்த நிலையில், இது தொடர்பாக வீராணம் காவல் நிலையத்தினரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆன்லைன் வாயிலாக புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்மீது எந்த விசாரணையும் நடத்தாமல், ஏற்கனவே இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டுள்ளதால், தற்போது கொடுக்கப்பட்ட புகாரை முடித்து வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர் என்று முனியம்மாள் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக வீராணம் காவல்நிலையத்தில் விசாரித்தபோது, வீராணம் போலீசார் முறையான பதில் தரவில்லை என்று கூறிய முனியம்மாள், நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் தனது நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டு தங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் திமுக ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது கணவர் பழனிவேல் உடன் சென்று மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல்ஹோதாவிடம் புகார் அளித்துள்ளார்.
ஆனால் முனியம்மாளின் இந்த குற்றச்சாட்டை திமுக ஊராட்சிமன்ற தலைவர் சுப்ரமணி மறுத்துள்ளார். திமுக ஊராட்சி மன்ற தலைவர்மீது நில அபகரிப்பு முயற்சி புகார் கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.