சேலம் மாவட்டத்தில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடிய சாலைகள்
சேலம் மாவட்டத்தில் அனைத்து சாலைகளும் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காட்சியளித்தன.;
வெளிச்சோடிய சாலை.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் துவங்கிய நிலையில் இரவு நேர ஊரடங்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.சாலைகளில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காட்சி அளிக்கிறது. சாலையில் தேவையில்லாமல் சுற்றித் திரியும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, இனிமேல் சாலையில் சுற்றித்திரியும் மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்க வைத்து எச்சரித்து காவல்துறையினர் அனுப்பி வைக்கின்றனர்.
சேலம் மாவட்டம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மாநகர காவல் துணை ஆணையாளர் மாடசாமி கூறும்போது, இரவு மற்றும் காலை என இரண்டு வேலைகளாக காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சிலர் சாலைகளில் தேவையில்லாமல் வருகின்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி அடையாளத்தை உள்ளிட்டவைகளை சோதனை செய்த பிறகு தேவையில்லாமல் சுற்றித் திரிவது தெரியவந்தால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று பொதுமக்கள் முழுமையாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.