அதிமுக வெற்றி திமுகவிற்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

நகர்புற உள்ளாட்சி தேர்தல் அதிமுக பெறுகின்ற வெற்றி திமுகவிற்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-10 02:48 GMT

சேலம் மாநகராட்சியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாநகராட்சியில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொடர்ந்து வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டு நிகழ்ச்சியில் பேசும்போது, ஜெயலலிதா சொன்ன சொல்லையும், சொல்லாத பல நலத் திட்டங்களையும் நிறைவேற்றி தந்துள்ளார். இதேபோன்று ஜெயலிதா வகுத்துத் தந்த பாதையிலும் வழியிலும் தவறாமல் நடந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி செய்தார்.

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெல்வதற்கான சூழ்நிலை இருந்தது. ஆனால் திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்ததால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். திமுக ஆட்சியில் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கையாளகாத ஆட்சியாக நடைபெற்று வருகிறது.

அதிமுக ஆட்சியில் கொரோனா பாதித்த போது பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் நிவராணம் வீடு வீடாக சென்று கொடுத்தது. ஆனால் தற்போது திமுகவினர் எங்காவது கொடுப்பதை  பார்த்திருக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பியவர், கொடுக்கின்ற கட்சி அதிமுக, எடுக்கின்ற கட்சி திமுக என்றும் விமர்சனம் செய்தார்.

அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் எந்த குறையும் இல்லாமல் கொடுக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியின் குப்பையாக கொடுத்துள்ளனர். நகர்புற உள்ளாட்சி தேர்தல் அதிமுக பெறுகின்ற வெற்றி திமுகவிற்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். நகர்புற உள்ளாட்சி தேர்தல் நல்ல தீர்ப்பை மக்கள் கொடுப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளது என்றும் பேசினார்.

Tags:    

Similar News