பெண் கவுன்சிலர்கள் கடத்தல்: அதிமுக எம்எல்ஏக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா
பெண் கவுன்சிலர்கள் இருவர் திமுகவினரால் கடத்தப்பட்டுள்ளதாகக் கூறி அதிமுக எம்எல்ஏக்கள் ஆட்சியரகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
சேலம் ஆட்சியர் அலுவகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள்.
சேலம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 13 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 6 பேர் திமுக, 6 பேர் அதிமுக, ஒருவர் பாமகவை சேர்ந்தவர்கள் ஆகும். ஒன்றிய குழுத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் உள்ளார்.
இந்த நிலையில் ஒன்றியக் குழுத் தலைவர் ஜெகநாதன் மீது இன்றையதினம் நடைபெற உள்ள ஒன்றியக்குழு கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
ஆனால், ஒன்றியக் குழு உறுப்பினர்களான 2 பெண் கவுன்சிலர்கள் சங்கீதா மற்றும் பூங்கொடி ஆகியோர் திமுகவினரால் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பெயரில் தேர்தலை நடத்தக் கூடாது என வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜ முத்து, நல்லதம்பி, ஜெயசங்கரன், சுந்தரராஜன் ஆகியோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தொடர்ந்து அதிமுக பெண் கவுன்சிலர்களை கத்தியை காட்டி மிரட்டி கடத்திச் சென்ற திமுகவினரை கண்டித்து ஆட்சியரகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.
பின்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.