சேலத்தில் திருநங்கையாக மாறிய மகன் கொலை: தாய் உள்ளிட்ட 6 பேர் கைது
சேலத்தில் திருநங்கையாக மாறிய மகனை ஆட்களை வைத்து கொலை செய்த தாய் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.;
கொாலை செய்யப்பட்ட திருநங்கையாக மாறிய நவீன்குமார்.
சேலம் மாநகர் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் உமாதேவி(45). கணவரை பிரிந்து வாழும் இவரின் மகன் நவீன்குமார். 19 வயதான நவீன்குமார் சமீபத்தில் திருநங்கையாக மாறி தனது பெயரை அக்க்ஷிதா என மாற்றிக் கொண்டார். இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள ஒரு முட்புதரில் கடந்தவாரம் நவீன்குமாரை காயங்களுடன் மீட்ட உமாதேவி அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதில் சிகிச்சை பலனின்றி கடந்த இரு தினங்களுக்கு முன்பு நவீன்குமார் என்ற அக்க்ஷிதா உயிரிழந்தார்.
இந்நிலையில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேக மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் தாய் உமாதேவி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் உமாதேவியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது மகன் திருநங்கையாக மாறியது பிடிக்காததால் அவருக்கு ஹார்மோன் ஊசி போட்டு ஆணாகவே மாற்று ஏற்பாட்டை செய்து வந்ததாகவும் அதற்கு நவீன்குமார் ஒப்புக் கொள்ளாததால், தனக்கு தெரிந்த நண்பர்களை கொண்டு அவனை அடித்து, வலுக்கட்டடாயமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றதாகவும் அப்போது அவரை தாக்கி வாயை பொத்தியதால் மூச்சுத்திணறி நவீன்குமார் இறந்துவிட்டதாக கருதி , அவரை தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது .
இந்நிலையில் நவீன்குமார் உயிரிழந்ததால் தாய் உமாதேவியை கைது செய்த போலீசார், நவீன்குமார் மீது தாக்குதல் நடத்திய வெங்கடேஷ், காமராஜ், கார்த்திகேயன், சந்தோஷ், சிவகுமார் உள்பட ஆறு பேரையும் அதிரடியாக கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதில் உமாதேவியை சேலம் பெண்கள் கிளை சிறையிலும், வெங்கடேஷ் உள்ளிட்ட 5 பேரையும் ஆத்தூர் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.
மகன் திருநங்கையாக மாறியதால் அவமானம் தாங்க முடியாத தாய், தெரிந்த நபர்களை வைத்து மகனையே அடித்துக் கொன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.