சேலத்தில் ஆள் கடத்தல், வழிப்பறி: போலீசார் துரத்தி 2 பேருக்கு கால்முறிவு

சேலத்தில் ஆள் கடத்தல், வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் துரத்தி பிடிக்க முயன்றபோது பள்ளத்தில் விழுந்து இருவருக்கு கால்முறிவு ஏற்பட்டது.

Update: 2022-03-09 07:00 GMT

சித்தேஸ்வரன் மற்றும் அரவிந்த். 

சேலம் மாவட்டம், வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவரை, 5 பேர் கொண்ட கும்பல் கடத்தி ரூபாய் 41 ஆயிரம், கால் சவரன் மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டதோடு ரூபாய் 10 லட்சம் பறிக்க முயன்றதாக அவர் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதேபோன்று கடந்த 7ஆம் தேதி தனபால் என்பவர் தோட்ட வேலை செய்வதற்காக பழைய சூரமங்கலம் அருகே சென்று கொண்டிருந்தபோது சொகுசு கார் ஒன்றில் வந்த ஐந்து பேர் அவரை வழிமறித்து ரூபாய் 2000 மற்றும் செல்போன், கைக்கடிகாரம் ஆகியவற்றை பறித்து சென்றதாக சூரமங்கலம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக விசாரணையை தொடங்கிய சூரமங்கலம் போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் மாநகர காவல் உதவி ஆணையாளர் நாகராஜன் தலைமையில் இரும்பாலை பிரதான சாலையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே சொகுசு கார் ஒன்று வந்தது. காரில் இருந்த நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். மேலும் காரில் 2 கத்திகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காரில் வந்த சித்தேஸ்வரன் மற்றும் அரவிந்த் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது அவர்கள் தப்பி ஓட முயன்றதாகவும் கூறப்படுகிறது.

காவல்துறையினர் அவர்களை துரத்திச் சென்றபோது இரண்டு பேரும் எதிர்பாராதவிதமாக பெரிய பள்ளத்தில் தவறி விழுந்ததில் இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால் முறிவு ஏற்பட்ட 2 பேரையும் மீட்டு காவல்துறையினர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இந்த சம்பவங்களில் தொடர்புடைய இலியாஸ், அஜித், தீபன் ஆகிய 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News