ஓமலூர் அருகே கொரோனா நோயாளியை சிகிச்சை மையத்தில் அனுமதிக்க அலைக்கழிப்பு

பெண் கொரோனா நோயாளியை சிகிச்சை மையத்தில் அனுமதிக்க அலைக்கழிப்பதாக . சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்திய வாலிபர்.

Update: 2021-05-26 07:15 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சிக்கனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் யசோதா(47). இவருக்கு காய்ச்சல் இருந்ததால் கடந்த 22ம் தேதி சரக்கபிள்ளையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை மேற்கொண்டார். 24ம் தேதி காலை தொலைபேசியில் தொடர்புகொண்ட சரக்கபிள்ளையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தினர், யசோதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறி, உடனடியாக சிகிச்சை மையத்தில் சேருமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

அதன்படி தனது சகோதரர் முனிராஜுடன் கருப்பூர் பொறியியல் கல்லூரியில் செயல்படும் சிகிச்சை மையத்திற்கு சென்ற யசோதா, தனது செல்போனுக்கு வந்த தகவலை காட்டி, தன்னை அனுமதிக்குமாறு கேட்டுள்ளார். ஆனால், செல்போன் தகவலை கொண்டு அனுமதிக்க முடியாது என்றும், அந்த தகவலை பிரிண்ட் எடுத்து வந்தால்தான் அனுமதிப்போம் என்று கூறி திருப்பி அனுப்பி உள்ளனர். முழு ஊரடங்கு காரணமாக பிரிண்ட் எடுக்கும் வசதி எங்கும் இல்லை. அங்கிருந்து சரக்கபிள்ளையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று எழுத்துபூர்வமான பரிந்துரை கடிதம் கேட்டபோது , ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர்.

ஓமலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்று கேட்கவேண்டும் அல்லது ஓமலூர் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்தால்தான் தருவோம் என்று கூறினர். அங்கு ஸ்கேன் எடுத்தபோது இரண்டு நாட்கள் கழித்துதான் ரிப்போட் தருவதாக கூறி திருப்பி அனுப்பிவிட்டனர். இறுதியாக அவர் தனது வீட்டிற்கே சென்று விட்டார். வீட்டில் தன்னை தனிமைபடுத்திக்கொள்ள வசதி இல்லாமல் வீட்டின் வெளியே படுத்து கிடக்கிறார்.

அவருக்கு கொரோனா பாசிடிவ் என தெரிந்தும் இதுவரை எந்த சிகிச்சையும், மருந்தும் வழங்கவில்லை. அவருக்கு ஸ்கேன் ரிப்போர்ட் கிடைக்க 2 நாள் ஆகும் என்பதால் அவருக்கு ஏற்பட்ட தொற்று மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து யசோதாவின் சகோதரர் முனிராஜ்  சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டு தனது ஆதங்கத்தை வெளிபடுத்தி உள்ளார்.

Tags:    

Similar News