அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும்:கோகுல்ராஜ் பாட்டி கோரிக்கை
கோகுல்ராஜ் கொலையில் தொடர்புடைய அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அவரது பாட்டி குஞ்சம்மாள் கண்ணீருடன் பேட்டி அளித்தார்.;
ஓமலூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த கோகுல்ராஜ் பாட்டி குஞ்சம்மாள்.
சேலம் மாவட்டம் ஓமலூர் சாஸ்தா நகரை சேர்ந்தவர் சித்ரா. இவரது கணவர் வெங்கடாஜலம் இறந்ததால் சித்ரா தனது தாயுடன் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் பட்டதாரி வாலிபரான சித்ராவின் இளைய மகன் கோகுல்ராஜ் கடந்த 2019ம் ஆண்டு ஆணவ படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் பகுதியில் தண்டவாளத்தில் வீசப்பட்டு கிடந்தது. விசாரணையில் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை கோகுல்ராஜ் காதலித்ததால் அவர் படுகொலை செய்யப்பட்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக தீரன் சின்னமலை பேரவையின் நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு விசாரணை மதுரை 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். அவர்களுக்கான தண்டனை விபரம் மார்ச் 8ம் தேதி தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதுகுறித்து ஓமலூரில் உள்ள கோகுல்ராஜின் பாட்டி குஞ்சம்மாளிடம் நிருபர்கள் பேட்டியளித்தார். எனது பேரனை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 10 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்படி தண்டனை வழங்கினால்தான், இனிமேல் இதுபோன்ற கொலைகள் நடப்பதை தடுக்க முடியும் என்றும், குற்றவாளிகளை ஒருபோதும் தப்பவிட கூடாது என்றும் அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.