மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாததால், அணையின் நீர் மட்டம் 53.98 அடியாக சரிந்துள்ளது.

Update: 2024-04-27 04:45 GMT
மேட்டூர் அணை.

மேட்டூர் அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாததால், அணையின் நீர் மட்டம் 53.98 அடியாக சரிந்துள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பாசனத்துக்குத் தேவையான நீரின் பெரும்பகுதியை இது வழங்குகிறது.

தற்போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி வறட்சி நிலவுவதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 300 கன அடியாக உள்ளது.

இந்நிலையில்,மேட்டூர் அணைக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 57 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி 70 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேலும், அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 54.15 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று 53.98 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 20.41 டிஎம்சியாக உள்ளது.

Tags:    

Similar News