மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 62 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 62 கன அடியாக அதிகரித்துள்ளது.

Update: 2024-04-05 06:15 GMT

மேட்டூர் அணை.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 62 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பாசனத்துக்குத் தேவையான நீரின் பெரும்பகுதியை இது வழங்குகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத தால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து முற்றிலுமாக நின்று போனது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம், நீர்வரத்து வினாடிக்கு 300 கன அடியாக இருந்த நிலையில், நேற்றும் அதே அளவில் நீடிக்கிறது.

இதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று (ஏப்.,4) வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 15 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஏப்.,5) வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நிலவரப்படி வினாடிக்கு 62 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 59.98 அடியாக இருந்த நீர் மட்டம், இன்று காலை 58.70 அடியானது. நீர் இருப்பு 23.72 டிஎம்சியாக உள்ளது.

Tags:    

Similar News