விருத்தாசலம்- சேலம் செல்லும் அதிவிரைவு ரயில் இன்று முதல் இயக்கம்

விருத்தாசலம்- சேலம் செல்லும் அதிவிரைவு ரயில் இன்று முதல் இயக்கப்பட்டன. பயணிகளின்றி ரயில் வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2021-06-01 08:45 GMT

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து வரும் ஜூன் 7ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு நீட்டித்துள்ளது. பஸ், ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் சிறு வியாபாரம் மற்றும் வேலைக்கு செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் கொரோனா பரவலுக்கு முன்பு இயக்கப்பட்டு வந்த விருத்தாசலம்- சேலம் அதிவிரைவு ரயில் இன்று முதல் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ,ஆத்தூர், வாழப்பாடி வழியாக தினசரி இயக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

இந்த அதிவிரைவு ரயில் தினசரி காலை 6 மணிக்கு புறப்பட்டு 7.30 மணிக்கு ஆத்தூர் வழியாக 9.30 மணிக்கு சேலம் சென்றடையும் என்றும் அதேபோல் மாலை 6 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு விருத்தாசலம் சென்றடையும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில்  இன்று இயக்கப்பட்ட விருத்தாசலம் – சேலம் செல்லும் அதிவிரைவு ரயில் ஆத்தூர் ரயில் நிலையத்திற்கு 7.30 மணிக்கு வந்தது. ஆனால் ரயில் இயக்குவது குறித்து முன் அறிவிப்பு ஏதும் இல்லாததால் பயணிகளின்றி ரயில் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் ரயிலில் அரசு பணியாளர்களை தவிர யாரும் செல்லாததால் பயணிகள் ரயில் ஆட்கள் இன்றி காலியாக சென்றது.

Tags:    

Similar News