அரசு பள்ளி வருகைப்பதிவேட்டில் சாதியுடன் பெயர் - சேலம் அருகே பரபரப்பு

ஆத்தூர் அருகே, நரசிங்கபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், வருகைப் பதிவேட்டில் மாணவிகளின் பெயரோடு சாதிப்பெயர் குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2021-12-22 12:00 GMT
சர்ச்சையில் சிக்கிய நரசிங்கபுரம் அரசு பெண்கள் பள்ளி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது,  நரசிங்கபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி. இங்கு, ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வருகை பதிவேட்டில் மாணவிகள் பெயர் பக்கத்தில் அவர்களுடைய சாதிப்பெயரை பல்வேறு வண்ணங்களில் குறிப்பிட்டு இருந்தது.


மேலும்,  வருகைப்பதிவேட்டில் உள்ள விவரங்கள், சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களுக்கும்  அனுப்பப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளனர். பள்ளியின் தரப்பில்,  மாணவிகளுக்கு அரசின் உதவித்தொகை மற்றும் நலத்திட்டங்கள் எளிதாகப் பெற்று தரும் வகையில், இவ்வாறு வருகை பதிவேட்டில் சாதி குறியீடு எழுதப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால், பெற்றோர்  இதனை ஏற்கவில்லை. குறிப்பிட்ட இந்த பள்ளியில் மட்டுமே வருகைப்பதிவேட்டில் ஜாதி பெயர் குறிப்பிட்டு உள்ளது கண்டிக்கத்தக்கது என்றும், இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். வருகைப்பதிவேட்டில் ஜாதி பெயர் குறிப்பிட்டுள்ள சம்பவம், நரசிங்கபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News