ஊராட்சிமன்ற அலுவலகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் பெயர் அழிப்பு : அதிமுக கொந்தளிப்பு
ஊராட்சிமன்ற அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பெயர் அழிக்கப்பட்டதால் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.;
ஆணையாளரிடம் விசாரித்த அதிமுகவினர்.
சேலம் மாவட்டம், புத்திரகவுண்டம்பாளையம் பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் இயங்கி வருகிறது. இந்த அலுவலக கட்டிடத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெயர் இடம் பெற்றிருந்தது. நேற்று திமுகவினர், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து எடப்பாடி பழனிசாமி பெயரை அகற்ற வேண்டுமென நிர்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக, திமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சந்திரசேகர் இரவோடு இரவாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பெயரை அழித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கர், ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ரா ஊராட்சி மன்ற தலைவரின் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் 15க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று ஆணையாளர், தன்னிச்சையாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பெயரை எவ்வாறு அழிக்கலாம் என கேள்வி எழுப்பினர். அதற்கு ஆணையாளர் சந்திரசேகர், திமுகவினர் எனக்கு கொடுத்த நெருக்கடியின் காரணமாக நான் மேலதிகாரிகளிடம் கேட்டேன். அவர்கள் பெயரை அழிக்க சொன்னதால் நீக்கினேன் என கூறியதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுகவினர் ஒரு அரசு அதிகாரி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என கூறி அவரிடம் புகார் மனுவை அளித்து விட்டு வெளியே வந்தனர். அரசு அதிகாரி ஒருவர் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவரின் பெயரை தன்னிச்சையாக அழித்திருப்பதை பார்க்கும்போது திமுகவினர் மிரட்டி, இருப்பது இதிலிருந்து தெரியவருகிறது. தொடர்ந்து இது போன்ற நிலை ஏற்பட்டால் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என சட்டமன்ற உறுப்பினர்கள் கூறினர். மேலும் இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறினர்.