ஜெ., கார் ஓட்டுநர் மரண வழக்கில் திருப்பம்: மீண்டும் விசாரணை துவக்கம்

ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் மரணம் தொடர்பாக சேலம் மாவட்ட காவல்துறையினர் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Update: 2021-10-22 06:00 GMT

ஜெயலலிதா கார் ஓட்டுனர் கனகராஜ்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது கார் மோதி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக கனகராஜின் அண்ணன் தனபால் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆத்தூர் காவல்நிலையத்தில்  வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 ல் வழக்கு விசாரணை நடைபெற்றது. கோடநாடு கொலை கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து கனகராஜ் மரணம், சயான் கார் விபத்து என சம்பவங்கள் நிகழ்ந்த காரணத்தால் கனகராஜ் மரணம் விபத்தல்ல கொலை என சகோதரர் தனபால் புகார் தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போது நீதிமன்ற அனுமதி பெற்று கனகராஜ் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை சேலம் காவல்துறையினர்  மீண்டும் தொடங்கியுள்ளனர். எடப்பாடியில் வசித்து வரும் கனகராஜின் அண்ணன் தனபாலை இன்று காலை சேலம் மாவட்ட காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.

இதனிடையே, ஆத்தூரில் உள்ள கனகராஜின் உறவினர் ரமேஷ் மற்றும் அவரது மனைவி சித்ரா ஆகியோரிடம் சேலம் டிஐஜி மகேஸ்வரி நேரில் தனித்தனியாக விசாரணை நடத்தினார். கனகராஜ் மரணம் தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் கிடைத்ததை அடுத்து காவல்துறையினர் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News