சோளிங்கர் கோயிலில் ஒரு வருடத்தில் ரோப்கார் சேவை:அமைச்சர் சேகர் பாபு

சோளிங்கர் யோகநரசிம்மர் கோயிலில் ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு ஒரு வருடத்தில் ரோப்கார் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார்

Update: 2021-06-11 12:59 GMT

சோளிங்கர் யோகநரசிம்மர் கோயில்

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 108 வைணவ திவ்வியதேசங்களில் புகழ்பெற்ற ஸ்தலமாக விளங்கி வரும் யோக நரசிம்மர் கோயில் 1305 படிகளைக் கொண்ட செங்குத்தான மலைக்கோயிலாகும். இந்நிலையில் கோயில் மூலவரான யோக நரசிம்மரை தரிசிக்க முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மலையேற முடியாதவர்கள் தங்கள் வசதிக்கேற்ப பணம் கொடுத்து டோலிகள் மூலம் சென்று மலையின் மேல் உள்ள சாமியை தரிசனம் செய்து வருகின்றனர். ஆனால் வசதியின்றி வறுமையில் உள்ளவர்கள வேறு வழியின்றி மலையடிவாரத்தில் நின்று வணங்கி செல்கின்றனர்.

இந்நிலைமையைப் போக்க கடந்த 2006ல் அன்றைய முதல்வர் கருணாநிதி சட்ட சபையில் 9 கோடிமதிப்பில் அத்திட்டத்தினை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து 2010ல் அடிக்கல் நாட்டப்பட்டு   ரோப்கார் அமைக்கும் பணிகள் துவங்கியது. ஆனால்   கடந்த  15ஆண்டுகளாக   பணிகள்  மெத்தனமாக நடந்து  வருகிறது. இதைக்  குறித்து அறிந்த மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,  இன்று நேரில் வந்து ஆய்வு செய்தார். அதில் அவர் கோயில் நிர்வாகிகள், அறநிலைய. அதிகாரிகளிடம், ஒப்பத்ததாரர்களிடம் மற்றும்  வருவாய்துறையினர் ஆகியோரிடம் பணிகள் தொய்வு குறித்தும், விரைந்து நடக்க தேவையானவைகள் குறித்த விளக்கங்களைக் கேட்டார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது,  இந்த ஆண்டு இறுதியில் ரோப்கார் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும். அப்பகுதி உடனடியாக சுற்றுலாத்தலமாக மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தொல்லியல் துறை, இந்து அறநிலைதுறை நிதிதுறை குழு வாயிலாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது அது முடிந்த பிறகு பெரிய கோயில்கள், வருமானம் குறைவான கோயில்கள் குடமுழுக்கு பற்றி அறிவிப்பு வெளியாகும்.  இந்துசமய அறநிலையத்துறை வெளிப்படை தன்மையோடு செயல்பட்டு வருகிறது. கோவில் நிலத்தை  யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் அரசியல் பேதமின்றி சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

மலைப்பாதையில் செல்ல முடியாதவர்கள் டோலி மூலம் தூக்கி செல்லப்பட்டு வருகின்றனர். அந்த தொழிலாளர்களுக்கு ரோப்கார் அமைக்கும் பணி முடிந்த பின்னர் அவர்களுக்குத் தகுதி அடிப்படையில் வேறு பணிகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அப்போது அறநிலையத்துறை ஆணையர்  குமரகுருபரன், மாவட்டஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், சப்கலெக்டர் இளம் பகவத்  ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News