கபடி போட்டி: அனுமதி மறுத்த காவல்துறை, உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கபடி விளையாட்டு போட்டி நடத்த அனுமதி மறுத்த காவல் துறை உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-02-05 14:44 GMT

கோப்புப்படம் 

ராணிப்பேட்டை மாவட்டம் ஜாகிர் தண்டலம் கண்டிகை கிராமத்தில் உள்ள வெற்றியின் சிகரம் கபடி குழுவின் சார்பில் ஜீவா என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில், கடந்த மாதம் 28 மற்றும் 29ம் தேதிகளில் கபடி போட்டி நடத்த அனுமதி கோரி நெமிலி காவல் ஆய்வாளரிடம் ஜனவரி 25ஆம் தேதி மனு விண்ணப்பித்ததாகவும், ஆனால் கபடி போட்டி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அனுமதி வழங்க மறுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது,காவல்துறை தரப்பில், கடந்த ஆண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்படாததால் சில வீரர்கள் காயம் அடைந்ததாகவும், கொரோனா பரவல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கருதி அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதி, பொது மக்கள் கூடுவதை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா பரவல் குறித்து அரசின் அறிவிப்பு ஏதும் தற்போது இல்லை என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதற்கான எந்தவித ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காயம் ஏற்படுகிறது போன்ற காரணங்களுக்காக கபடி விளையாடுவதை தவிர்க்க முடியாது என்றும் கூறி, கபடி போட்டிகளை நடத்த அனுமதி மறுத்த காவல்துறை உத்தரவை ரத்து செய்து நீதிபதி சந்திரசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் விளையாட்டு வீரர்களுக்கான போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து மாற்று தேதியில் போட்டிகளை நடத்த அனுமதி கோரி புதிய மனு அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதி, அந்த மனு மீது உரிய உத்தரவுகளை பிறப்பிக்க காவல்துறைக்கும் உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.

Tags:    

Similar News