தனியாக சென்ற பெண்களிடம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

பெண்களிடம் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் இருவரை ஆற்காடு போலீஸார் கைது செய்து 24 சவரன் தங்க நகைகளை மீட்டனர்

Update: 2021-08-23 05:07 GMT

தொடர் நகைபறிப்பில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார்

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியை செல்வி.  கடந்த 15ந் மதியம் உணவிற்காக வீட்டுக்கு வந்த அவர் மீண்டும் பள்ளிக்கு நடந்து சென்றார்.

அப்போது எதிரே பைக்கில் வந்த மர்மநபர்கள், ஆசிரியை செல்வி தனியாக நடந்து வருவதையறிந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 15 சவரன் தங்க செயினை பறித்துச் சென்றனர். இது குறித்து  ஆசிரியை செல்வி ஆற்காடு டவுன் போலீஸில் புகார் அளித்தார். 

இந்நிலையில் போலீஸார் ஆற்காடு அருகே கண்ணமங்கலம் கூட்ரோடில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த இருவரை மடக்கி விசாரித்தபோது சந்தேகிக்கும் வகையில் நடந்து கொண்டதால் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அதில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அல்லித்தெரு மொகைதீன் கான் மற்றும் ஜாபர்கான்(20) என்று தெரிய வந்தது. மேலும் இவர்கள் தான் ஆசிரியையிடம் 15 சவரன் செயினை பறித்துச் சென்றவர்கள் எனவும் தெரியவந்தது. .

போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தது. இருவரும் சேர்ந்து கடந்த 9ம் தேதி கலவையடுத்த வாழப்பந்தல் அருகே மொபட்டில் இரண்டு பெண்களிடம் 5.5 சவரன் செயினை பறித்துள்ளனர். பின்பு, 13ம் தேதி வேலூர் மாவட்டம் புதுவசூர் அருகே ஒரு பெண்ணிடம் செயின் பறிக்க முயன்றுள்ளனர். அன்றே அடுக்கம்பாறையடுத்த மேல்வல்லம் அருகே 2 பெண்களிடம் 2.5 சவரன் நகையை பறித்துள்ளனர். அன்றிரவே இருவரும் ஆரணி அடுத்த துக்கரிம்பட்டு அருகே தனியாக சென்ற பெண்ணிடம் 2.5 சவரன் நகையை பறித்துள்ளனர்.

இதனையடுத்து மொய்தீன் கான், ஜாபர்கான் இருவரையும் கைது செய்த போலீஸார் 24 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News