ஓட்டுக்கு பணம் வழங்கி சிறுமைப்படுத்தாதீர்கள்: மலை கிராம மக்கள்

ஆற்காடு அருகே நந்தியாலம் குறிஞ்சி நகர் பகுதியில் ஓட்டுபோட பணம் பொருள் வழங்கி எங்களை சிறுமைப்படுத்த வேண்டாம் என மலைக்கிராம மக்கள் அறிவிப்பு

Update: 2021-10-05 06:37 GMT

பணமோ,பொருளோ வாங்கமாட்டோம் என்று முடிவெடுத்த கிராம மக்கள்

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நந்தியாலம் பஞ்சாயத்தைச் சேர்ந்த குறிஞ்சி நகர் மலைப்பகுதியில் 15க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 80க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் 6ந்தேதி அப்பகுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர்,ஒன்றியக் கவுன்சிலர்,கிராம பஞ்.தலைவர், மற்றும் கிராம வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அப்பகுதியில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் தேர்தலில் வாக்ஙளிக்க யாரிடமும் பணமோ,பொருளோ வாங்கமாட்டோம் என்று முடிவெடுத்தனர்.

அதனைத்தொடர்ந்து அவர்கள் தங்கள் வீட்டுச்சுவர்களில், வாக்காளர்கள்,ஒற்றுமையுடன் பணமோ, பொருளோ பெறாமல் வாக்களிப்பது என முடிவெடுத்துள்ளோம். தயவுகூர்ந்து விலை பேசி எங்களை சிறுமைப்படுத்தாதீர்கள் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டியிருந்தனர். 

இதுகுறித்து கேட்கப்பட்டபோது,நாங்கள் ஏழைகள்தான் நாளொன்றுக்கு 100 தான் எங்கள் வருமானம். எங்கள் பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி,கழிவுநீர் கால்வாய் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் உள்ளோம். எதையும் தராமல் நல்லவர் பதவிக்கு வந்தால் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் உள்ளதாகக் கூறினர்.

மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் கேள்வி கேட்கும் தகுதியை நாங்கள் பெற்றுள்ளோம் என்பதை பெருமையுடன் தெரிவித்தனர். பஞ்சாயத்து நிர்வாகம் ஊழலற்ற நிர்வாகத்திற்கு இது அடி கோலாக உள்ளது என சமூக ஆர்வலர் கூறிவருகின்றனர்..

Tags:    

Similar News