அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் மேற்குவங்கத்தை சேர்ந்த பெண் உயிரிழப்பு.

சொந்த ஊருக்கு போகும் வழியில் உடல் நலக்குறைவால் மேற்குவங்கப் பெண் உயிரிழப்பு. கைக்குழந்தையுடன் கணவன் பரிதவிப்பு

Update: 2021-06-02 09:02 GMT

மேற்கு வங்கத்தைச்  சார்ந்த கிரிட்டிபாஷ் சர்டார். இவர் திருப்பூர் அடுத்த ஊத்துக்குளியில் தேங்காய் நார் உரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார், இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணத்தினால் வேலை இழந்த கிரிட்டிபாஷ் சர்டார் தனது இரண்டு வயது குழந்தை மற்றும் காச நோயால் பாதிக்கப்பட்ட தன் மனைவி சராபந்தி சர்டார் உடன் மேற்கு வங்கத்திற்கு செல்வதற்காக வீட்டை காலி செய்து கொண்டு நேற்று மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பூரில் இருந்து புறப்பட்டார்..

ரெயில் காட்பாடி கடந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தபோது,  சராபந்தி சர்டார் தொடர்ந்து வாந்தி எடுத்த நிலையில் திடீரென ரெயிலில் மயங்கி விழுந்தார். இது குறித்து அரக்கோணம் ரெயில் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது அப்போது ரெயில்வே அதிகாரி இது குறித்து அரக்கோணம் ரெயில்வே மருத்துவமனைக்கு தகவல் கொடுத்துள்ளார், ரெயில் அரக்கோணம் வந்தடைந்த நிலையில் ஒரு மணி நேரத்திற்கு பிறகும் ரயில்வே மருத்துவ குழு அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வர தாமதம் ஏற்பட்டது.

கால தாமதமாக வந்த டாக்டர், சராபந்தி சர்டாரை சோதித்ததில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இது குறித்து வட மாநிலத்தைச் சார்ந்த கிரிட்டிபாஷ் சர்டாரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்து இறந்த சராபந்தி சர்டார் உடலை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந் நிலையில் இவை ஏதும் அறியாமல் தூங்கிகொண்டிருந்த கைக்குழந்தையை கையில் ஏந்தி கிரிட்டிபாஷ் சர்டார்செய்வதறியாமல் திகைத்து நின்றிருந்தார். இக்காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இது குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், அரக்கோணம் தாசில்தார் பழனிராஜனை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து விசாரித்து வட மாநிலத்தை சார்ந்த கைக் குழந்தையுடன் இருந்த அந்த நபருக்கு உதவுமாறு உத்தரவிட்டார்.

இதனடிப்படையில் அரக்கோணம் தாசில்தார் அரக்கோணம் ரெயில்வே காவல் நிலையத்திற்கு வந்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமியிடம் இது குறித்து விசாரித்தார், மேலும் சம்பந்தப்பட்ட நபருக்கு அவர் சொந்த ஊருக்குச் செல்வதற்கு உண்டான  அனைத்து வசதியும் செய்து தரப்படும் என்று  தெரிவித்தார்.

Tags:    

Similar News