அரக்கோணம் அருகே ரெயிலில் சிக்கி 3 மான்கள் பலியான பரிதாபம்.

அரக்கோணத்தில் இருந்து திருத்தணி செல்லும் பாதையில், தண்ணீருக்காக வழி தவறி வந்த 3 மான்கள் ரெயிலில் அடிபட்டு பலியாகின

Update: 2021-06-10 07:00 GMT

அரக்கோணம் திருத்தணி இருப்புப்பாதையில் ரெயிலில் சிக்கி 3 மான்கள் பலியானது

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்திலிருந்து திருத்தணிக்கு செல்லும் இருப்பு பாதையோரமாக உள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன.  அவற்றில் மான்கள் சில நேரங்களில் தண்ணீரைத்தேடி வழி மாறி அடிக்கடி  வனப்பகுதியைை விட்டு  வெளியே வந்து சாலைகளில் சுற்றி தண்ணீரைத் தேடி  அலைகின்றன  அப்படி  அலையும் போது தெருநாய்களிடம் சிக்கி பலியாகின்றன, அல்லது சமூக விரோதிகளிடம் சிக்கி இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன  இது போன்ற  நிகழ்வுகள் தொடர்ந்து நடந்துவரும்  நிலையில்  அப்பகுதி வனத்துறையினருக்கு இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும்  வனத்துறையினர் தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் திருத்தணி அரக்கோணம் இடையே உள்ள இருப்பபாதையில் வனத்திலிருந்து வழி தவறி வந்த 3 மான்கள் ரெயிலில் அடிபட்டு பலியாகின. அதனை அவ்வழியாக சென்றவர்கள்  பார்த்து உடனே அரக்கோணம் ரெயில்வே போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் அங்கு வந்த எஸ்ஐ ஆனந்தன், தண்டவாளத்தில் மான்கள் இறந்து கிடப்பதை பார்த்து வனத்துறையினருக்கு  தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து வந்த அவர்கள்  மான்களின் உடல்களை பிரேதபரிசோதனைக்கு கொண்டுசென்றனர்.

மான்கள் தண்ணீருக்காக வழி தவறி வந்து இது போன்று பலியாவதைத் தடுக்க வனப்பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளை அமைத்து நீர் நிரப்பி வைத்து மான்களை பாதுகாக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News