அரக்கோணம் ரயில் நிலையத்தில், ரயில் தானாகவே 300 மீட்டர் பின்நோக்கி சென்றதால் பரபரப்பு

அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில் தானாகவே பின்நோக்கி 300 மீட்டர் தூரம் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது சதி செயலா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-08-09 16:46 GMT
பைல் படம்

அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில், நிறுத்தி வைத்திருந்த மின்சார ரயில், டிரைவர் இல்லாமல் பின்னோக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது..

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சென்னை சென்ரலுக்கு இன்று மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு செல்லும் மின்சார ரயில் ஒன்று ஆறாவது பிளாட்பாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அதன் டிரைவர் சென்னையை சேர்ந்த பரமேஸ்வரன், 45, ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். மாலை 5:00 மணிக்கு டிரைவர் இல்லாமலேயே ரயில் திடிரென பின்னோக்கி சென்றது. இதையறிந்த ரயில்வே ஊழியர்கள் இந்த மார்க்கத்தில் மின்சார இணைப்பை துண்டித்து ரயிலை நிறுத்தினர்.

இது குறித்து ,அரக்கோணம் ரயில்வே பொறியாளர்கள் கூறியதாவது: இந்த ரயிலின் மீது பேண்டா கிராம் என்ற கொக்கி உள்ளது. அது தான் மின் கம்பத்தில் இருந்து ரயிலை இயக்க மின்சாரத்தை கொண்டு வருகிறது.

இந்த கம்பி உடைந்து விட்டது. இதை சென்னையில் தான் சரி செய்ய முடியும். இதனால் ,இந்த ரயில் நகராமல் இருக்க பேண்டா கிராம் கொக்கி மீது கட்டை வைத்து மின்சாரத்தை தடுப்பார்கள். ஆனால் டிரைவர் கட்டை வைக்க மறந்து விட்டதால், திடிரென அதிக மின்சாரம் பாய்ந்ததால் ரயில் 300 மீட்டர் பின்னோக்கி சென்றது

அதற்குள் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ரயில் நின்று விட்டது. ஒரு வேளை மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருந்தாலும் சிறிது துாரம் தான் ஓடியிருக்கும். இதனால் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு எதுவும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.  மேலும்,ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்..

Tags:    

Similar News