இறந்தவர்களின் உடலை புதைப்பதில் அலட்சியம் காட்டும் அரக்கோணம் நகராட்சி

அரக்கோணம் நகராட்சி இறந்தவர்களின் உடலை புதைப்பதில் அலட்சியம் காட்டுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-05-27 13:15 GMT

இறந்தவர்களின் உடலை புதைப்பதில் அலட்சியம் காட்டும் அரக்கோணம் நகராட்சி

அரக்கோணம் நேருஜி நகரில்  அதிக குடியிருப்புகள் உள்ள  பகுதியில் அமைந்துள்ள  இடுகாட்டில் இறந்தவர்கள் உடலை புதைப்பது வழக்கம்.

தற்போது அதிக அளவில் நோய்த்தொற்று காரணமாக இறந்து வருகின்றனர். அவர்களின் சடலங்களை நகராட்சி நிர்வாகம்உரிய முறையில் அடக்கம் செய்யாமல், சடலங்கள் சுடுகாட்டில் வீசப்பட்டு செல்வதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பரவி வருகிறது.

இதனால், நகராட்சி நிர்வாகம் தற்போது ஆட்களை அனுப்பி, இறந்த சடலங்களின் உரைகளை தீயிட்டுக் கொளுத்தி, வெளியே தெரிந்த சடலங்களின் உறுப்புக்களை மண் போட்டு புதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு அறிவித்த கொரோனா நடைமுறை விதிகளின்படி நகராட்சி நிர்வாகம் முறையாகப் பின்பற்றுவதில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு மற்றும் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து நகராட்சி ஆணையாளரிடம் (பொறுப்பு) ஆசீர்வாதம் விளக்கம் கேட்டதற்கு, அரசு மருத்துவமனையில் காவல்துறை தரப்பில் அடையாளம் தெரியாத இறந்தவர்களின் சடலத்தை பிணவறையில் வைப்பார்கள். பின்னர் சடலங்களுக்கு உரிமை கோராத பட்சத்தில் காவல்துறை தரப்பில் கொண்டு வந்து சுடுகாட்டில் புதைக்கப்படுகிறது. அது முறையாக புதைப்பதில்லை என்ற காரணத்தினால் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீண்டும் பள்ளம் தோண்டி முறையாக புதைக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்.

மேலும் சுடுகாட்டில் போதிய இடவசதி இல்லை எனவும் இறந்தவர்களின் உடலை எரி மேடையில் எரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News